Monday, October 1, 2018

மத [மன]மாற்றம்

அன்பே சிவம், அன்புதான் இறைவன் என்கிறோம். எல்லா மதங்களும் அன்பைத் தான் போதிக்கின்றன. எல்லோரும் ஓர் குலம் என்கிறோம். சமத்துவம், சகோதரத்துவம் என்கிறோம். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை. மதத் துவேஷம் அதிகம் காணப்படுகிறது.

வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை, வான் மதியும், மீனும், கடல்  காற்றும், மலரும், மண்ணும், கொடியும், சோலையும் நதியும் மாறவில்லை. மனிதன் மாறிவிட்டான். மதத்தில் ஏறி விட்டான் என்று கவிஞர் பாடினார்.  அதை எல்லோரும் மறந்து விட்டனர்.


2017 உலக ஜனத்தொகையில் கிருஸ்தவர்கள் 238 கோடி, முஸ்லிம்கள் 180 கோடி, ஹிந்துக்கள் 110 கோடி. சில வருடங்களில் முஸ்லிம்கள் கிருஸ்தவர்களை விட அதிகம் இருப்பார்கள் என்று கணக்கிடப் பட்டு இருக்கிறது.


வேறு மதத்தில் இருந்து கிருஸ்தவ, முஸ்லிம் மதத்திற்கு மாற முடியும். கிருஸ்தவர்கள் மத மாற்றத்தை பரப்புகிறார்கள். கிருஸ்துவராக மாறுவதற்கு ஒரு தேவாலயத்தில் ஞானஸ்தானம் செய்விக்க வேண்டும். முஸ்லிம் ஆக மாறுவதற்கு கலிமா ஓத வேண்டும். 


ஆனால் ஹிந்து மதத்துக்கு யாரும் மாற முடியாது. மாற்ற முடியாது. மாறுவதற்கு எந்த வழிமுறையும் கிடையாது. ஹிந்துவாக மாறுவதற்கு எதுவுமே செய்ய வேண்டாம். அந்த வாழ்க்கை முறையைக் கடைப் பிடித்தால் போதும். அது ஹிந்து மதத்தின் தனித்தன்மை.


ஹிந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு ஒருவர் மாறப் பல காரணங்கள் இருக்கும். அதற்கு மற்றவர் வருத்தப் படலாம், கோபப். படலாம். என்ன செய்ய முடியும். அது அவர் விருப்பம். அதனால்  மத விஷயத்தில் அதிகம் தலையிடாமல் இருப்பது எல்லோருக்கும் நல்லது.


நம் நாட்டில் பல மதங்களும், சாதிகளும், மொழிகளும் இருப்பதால் ஒற்றுமை இல்லை. நிறைய பொக்கிஷங்கள் இருந்தால் சந்தோஷப்படுகிறோம். சிறந்த மதங்கள், மொழிகள் இருந்தால் சண்டை போடுகிறோம். மாற்றி யோசியுங்கள்.


பின் குறிப்பு : நான் இங்கே உளறி இருப்பது உங்களில் பலருக்குப் பிடிக்காது என்று எனக்கு நன்கு தெரியும். ஏதோ பொழுது போகாமல், வேறு வேலை இல்லாமல் இதை எழுதி விட்டேன். நான் சொல்வதில் ஏதேனும் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்.

No comments :

Post a Comment