Saturday, August 11, 2018

கடவுளின் கணக்கு

ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போக்கர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். 

சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர். ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றார். ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள், இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக் கொள்ள முடியும்? என்றார்.

மூன்றாம் நபர் இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன். நீங்கள் உங்கள் ரொட்டிகளை ,ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். அப்பொழுது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். 

இது சரியான யோசனை என்று ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள். பொழுது விடிந்தது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணயங்களை கொடுத்து நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளை கொடுத்தவர் அந்த காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார். மற்றொருவர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள். ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(5:3)

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன். நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது, என்றாலும் சமமாகவே பங்கிடுவோம் என்றார்.

சுமுகமான முடிவு எட்டாத்தால் விஷயம் அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு எவ்வாறு தீர்ப்பு சொல்வது என்று புரிபடவில்லை. நாளை தீர்ப்பு சொல்லதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான். இரவு கனவில் கடவுள் காட்சி அளித்து சொன்ன தீர்ப்பும், விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் சபை கூடியது. மன்னன் இருவரையும் அழைத்தான். மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டிகள் கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.

ஒரு காசு வழங்கப்பட்டவர், மன்னா! இது அநியாயம். அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க சம்மதித்தார்.

அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அதில் அவனுக்கு எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது.ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அவன் தருமம் செய்தது ஏழு துண்டு ரொட்டிகள்.

கடவுளின் கணக்கு துல்லியமாக இருக்கும். இழந்ததை தருவது அல்ல அவன் கணக்கு. எது புண்ணியம் சேர்க்குமோ அதுதான் அவன் கணக்கு. அவனது கணக்கு புண்ணியக்கணக்கு!! கடவுளின் கணக்கு!!!



No comments :

Post a Comment