Friday, August 3, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 616 TO 630

616. மத நல்லிலக்கணம், சாதி ஒருமைப்பாடு இவை எல்லாம் பிறரைக் குற்றம் சொல்வதால் வரவே வராது. அவர்களைப் பாராட்டிப் பேசுவதால் மட்டுமே வரும்.

617. பிற மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை, வழிமுறைகளை நாம் பின்பற்றினால், அவர்கள் நமது மதக் கருத்துகளை, வழிமுறைகளைப் பின் பற்றுவார்கள்.

618. முஸ்லிம்கள் ஒரு நாளில் ஐந்து முறை தொழவேண்டும். எல்லோரும் பின்பற்ற மசூதியில் ஒலிபரப்புகிறார்கள். அப்போது நாமும் நம் இறைவனை தொழலாமே.

619. கை வைத்தியம் சொல்வதில் தவறு இல்லை. ஆனால் நன்றாகத் தெரிந்தவர்களுக்குச் சொல்லுங்கள். உயிருக்கு ஆபத்தான நோய்களுக்குச் சொல்லாதீர்கள்.

620. எல்லா மொழிகளும் சிறந்த மொழிகள் ஆகும். தாய் மொழியாகப் பேசும்போது அது இன்னும் சிறந்ததாகத் தெரியும். ஒவ்வொருவருக்கும் அது பொருந்தும்

621. ஏற்படுத்தப் பட்ட விதிகள், விதிகள் தான். அவைகளை மாற்ற முடியாது. அதற்கு விதிவிலக்குகள் உண்டு. ஆனால் விதிவிலக்குகள் விதியாக முடியாது.

622. பொழுது புலர்ந்து வெளிச்சம் வருவதற்குள் படுக்கையை விட்டு எழ வேண்டும் என்பது நியதி. இதை இப்போது பலரால் ஏன் கடைப்பிடிக்க முடியவில்லை?

623. ஒருவர் பலனில்லாத ஒரு காரியத்தை செய்வதற்கு, "இல்லாத கறுப்புப் பூனையை இருட்டில் தேடுவதைப் போல" என்று கூறுவார்கள். வீண் வேலை தானே?

624. இந்தத் தலைமுறையைப் போல நான் கஷ்டப்பட்டு வேலை செய்ததில்லை. நிறைய சம்பாதித்ததில்லை. நிறைய செலவும் செய்ததில்லை. அந்த வாழ்க்கையே தனி.

625. நமக்கு வயதாகிவிட்டதால் வேலை இல்லாமல் இருக்கிறபோது, நமது குழந்தைகள் கஷ்டப்பட்டு வேலை செய்வதைப் பார்க்கையில், மனம் வேதனைப்படுகிறது.

626. உபயோகிக்கக் கூடாத கெட்ட வார்த்தைகளை உபயோகித்து, விமர்சனம் செய்து, தாங்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர்கள் என்று காட்டுவதில் என்ன பலன்?

627. பிறரிடம் உள்ள நல்ல குணங்களைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யவேண்டும். அது சுய பரிசோதனை. அது ஒருவரை மேம்படுத்தும். நாட்டை மேம்படுத்தும்

628. பொறாமை, ஆசை, கோபம், கடும் சொற்கள் இவைகளைத் தவிர்க்க வேண்டும் என்று திருவள்ளுவர் நமக்குக் கூறி உள்ளார். பலருக்கு அதெல்லாம் தெரியாது

629. இசை ஞானமும் மத நல்லெண்ணமும் கொண்ட ஒரு பாடகர் எந்தப் பாடலையும் பாட அவருக்கு உரிமை உண்டு. தவறு இல்லை. அது அவரது தனி மனித சுதந்திரம்.

630. ஒருவருக்கு தலைமுடி கருப்பாக இருக்கிறது. தாடி வெள்ளையாக இருக்கிறது.என்ன அர்த்தம்? தாடிக்கு கலர் கொடுக்க முடியவில்லை என்று அர்த்தம்.

No comments :

Post a Comment