Friday, December 7, 2018

பாரம்பரிய பழக்க வழக்கம்

ஒரே தலைவலி. மருந்துக் கடைக்குச் சென்றேன். மருந்துக் கடையில் இருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை ஸ்டிரிப் ஒன்றைத் தந்தான். உனது ‘ஓனர்’ எங்கேப்பா என்று கேட்டேன்.


அவருக்குச் சரியான தலைவலி. அதோ அந்தக் காப்பிக் கடையில் காப்பி சாப்பிடப் போயிருக்கிறார் என்றான் அவன்!


என் கையிலிருந்த தலைவலி மாத்திரை ஸ்டிரிப் என்னைப் பார்த்து ‘ஙே’ என்று விழித்தது!


அம்மாவுக்கு பிபியும் (ப்ப்) ஷுகரும் ஏறி விட்டது. ஆகவே அலறி அடித்துக் கொண்டு டாக்டரைப் பார்க்க காலையிலேயே அம்மாவுடன் கிளம்பினேன்.


டாக்டர் யோகா செய்து கொண்டிருந்தார். முக்கால் மணி நேரம் காத்திருந்தோம். அம்மாவை செக் பண்ணிப் பார்த்த டாக்டர் மருந்துகளை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்த வேண்டும் என்றும் வேளாவேளைக்குச் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை பகன்றார். அவர் எழுதித் தந்த அதிகப்படியான 5, 6 மாத்திரைகள் கொண்ட சீட்டை வாங்கிக் கொண்டேன்.


ஒரு ஆவல் உந்த, “டாக்டர், நீங்கள் யோகா செய்கிறீர்களா?” என்று கேட்டேன். 15 வருடமாகச் செய்து வருவதாகவும் அதனால் தான் பிபி, ஷுகர் இல்லாத ஆரோக்கிய வாழ்வைக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.


பிபி, ஷுகரைக் குறைக்க அவர் எழுதித் தந்த நீண்ட மாத்திரை சீட்டைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று என்னைப் பார்த்து விழித்தது.


மனைவியின் தலைமுடி கோரமாக ஆகிக் கொண்டிருப்பதாக அவளுக்கு ஒரு உணர்வு. "சரி, வா பியூட்டி பார்லர் போவோம்!" என்றேன்.


நமது நலனைக் கருதி பல்வேறு பேக்கேஜ்கள் நமக்கு உகந்ததாக இருப்பதாக ரிஸப்ஷனிஸ்ட் அன்புடன் சொன்னாள். 1200 ரூபாயில் ஆரம்பம். 3000 ரூபாய் வரை போகிறது லிஸ்ட். பேரம் பேசி 3000 ரூபாய் பேக்கேஜை 2400'க்கு முடித்தேன். (அட, என்ன எனது சாமர்த்தியம் பார்த்தீர்களா!)


மனைவியின் கேசத்தைக் கோதி விட்டுக் கொண்டிருந்த பெண்மணியின் தலை முடி அழகாக இருந்ததோடு கம கமவென ஒரு நறுமணமும் அதிலிருந்து வந்தது.


‘அட, நல்ல வாசனையாக இருக்கிறதே’, என்று அவளைப் பாராட்டினேன்.


அவள் நன்றி தெரிவித்ததோடு, காலம் காலமாக அனைவரும் உபயோகித்து வரும் சம்பிரதாயமான எண்ணெயைத் தான் சூடத்தைக் கலந்து உபயோகித்து வருவதாகவும் அதனால் முடி நீண்டு அழகாக இருப்பதாகவும் தெரிவித்தாள்.


2400 ரூபாய்க்கு பேரம் பேசிய என்னைப் பார்த்து என் மனைவி விழிக்க அவளைப் பார்த்து நான் விழித்தேன்.


ஒருநாள் மதிய உணவிற்குப் புகழ் பெற்ற உணவு விடுதிக்குக் குடும்பத்தோடு சென்றேன்.


சாப்பிட்டு முடிந்தவுடன் பில்லை நீட்டிய மானேஜர், “சாப்பாடு எப்படி சார் இருந்தது? பசு நெய், சுத்தமான ஆயில், பாஸ்மதி அரிசி மட்டும் தான் நாங்கள் உபயோகிக்கிறோம். அடிக்கடி வாருங்கள்” என்று சொன்னார். அத்துடன் தன் கேபினுக்கு அழைத்து தனது விஸிடிங் கார்டையும் கொடுத்தார்.


அங்கிருந்த டிபன் கேரியரை நான் பார்த்தேன். அப்போது ஹோட்டல் பணியாளர்கள் இருவர் தங்களுக்குள் பேசிக் கொண்டதையும் கேட்டேன்.


“சுனில், சாரோட டிபன் பாக்ஸை எடுத்து தனியே வை. அவர் சாப்பிட வர இன்னும் பத்து நிமிடமாகும்”


அவரைப் பார்த்து நான் கேட்டேன், “ஏன், உங்கள் சார் இந்த ஹோட்டலிலேயே சாப்பிட மாட்டாரா?”


“ஊஹூம்! ஒருபோதும் சாப்பிட மாட்டார். அவருக்கு வீட்டு சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும்!”


என் கையில் இருந்த 1670 ரூபாய் பில்லைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று விழித்தது. 


நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தோ மானால் நமக்கு செலவுக்குச் செலவும் மிச்சம்; ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் அற்புதமாக நிலைத்து நீடித்திருக்கும்!



No comments :

Post a Comment