Tuesday, November 13, 2018

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்.

முகநூலில் நிமிடத்திற்கு ஒரு பதிவு வீதம் அரசியலைப் பற்றி பதிவுகள் வருகின்றன. படித்தவர்களும், பாமரர்களும், அரசியல் சார்பு உள்ளவர்களும், இல்லாதவர்களும் பதிவுகள் போடுகிறார்கள். அதைப் படித்து விட்டு பலர் பல விதமான கருத்துகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். 

நான் ஒரு எளியவன். 73 வயதான முதியவன். அரசியல் சார்பு இல்லாதவன். நான் கூறுவதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள். நாட்டுக்கு சேவை செய்யும் எண்ணம் உள்ளவர் ஒரு கட்சி ஆரம்பித்து, பொது மக்களிடம் நன்கொடை வாங்கி, கணக்கு வழக்குகளை சரியாக தணிக்கை செய்யப்பட்டு, தேர்தலில் தனது வேட்பாளர் சார்பில் செலவு செய்ய வேண்டும்.


வேட்பாளர் தனது சொந்தப் பணத்தை செலவு செய்யக் கூடாது. அப்படி செய்தால், தேர்தலுக்குப் பிறகு செலவு செய்த பணத்தை திரும்ப பெறுவதில் குறியாக இருப்பார். அங்கு தான் லஞ்சம் ஊழல் எல்லாம் ஆரம்பம் ஆகிறது.


உங்களுக்கு நன்றாகத் தெரியுமா? நீங்கள் ஆதரிக்கும் நபர் நேர்மையானவர், லஞ்சமோ ஊழலோ செய்யமாட்டார். அவரது கட்சிக்காரர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள், அவர் சொற்படி நடப்பார்கள் என்று உங்களால் உறுதியாகக் கூற முடியுமா? அப்படியென்றால் அவருக்கு ஓட்டுப் போடுங்கள்.


இந்த நாட்டில் எந்தத் தனி மனிதன் தனது கட்சியையும் வேட்பாளர்களையும் தனது கட்டுக் கோப்பில் வைத்திருந்து லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சியை தருவார் என்று நம்புகிறீர்கள். ஆனானபட்ட எம்ஜியார் பட்ட கஷ்டங்கள் உங்களுக்குத் தெரியாதா, மறந்து விட்டதா?


தெரியாமல் கேட்கிறேன். தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தாமல் எப்படி ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க போகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆளாளுக்கு எவரையாவது தலையில் தூக்கி வைத்து பேயாட்டம் ஆடுகிறீர்கள்.


அவர்  தேர்தலில் அளவுக்கு மீறி செலவு செய்ய மாட்டார் என்று தெரியுமா? அப்படி ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க முடியாத போது, ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன?. இங்கு நிலமை என்றும் மாறப் போவது இல்லையே?


இந்த திருநாட்டில், ஒரு நேர்மையான திறமைசாலி தனியாக அரசியல் கட்சி ஆரம்பித்தால் அவரைச் சுற்றி உள்ளவர்கள் அவரை நேர்மையாக இருக்க விடமாட்டார்கள். அவரே ஒரு அரசியல் கட்சியில் இருந்தால், அந்தக் கட்சி அவரை நேர்மையான வழியில் போக விடாது.


ஒரு புரட்சி வெடித்தாலே ஒழிய இந்த அரசியல்வாதிகள்  திருந்த மாட்டார்கள். ஓட்டுப் போட்டாலும் ஆபத்து, போடா விட்டாலும் ஆபத்து. பேசாமல் நோட்டாவில் ஒட்டைப் போட்டு விட்டு கிருஷ்ணா, ராமா என்று பேசாமல் இருங்கள். புரட்சி தானே வெடிக்கும். மாற்றம் வரும். நல்ல காலம் பிறக்கும்.


இதைப் படித்த பிறகும் உங்கள் கருத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று எனக்கு நன்கு தெரியும். இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போமே என்று ஒரு நப்பாசை. விதி என்று ஒன்று இருக்கிறதல்லவா, அதை மாற்றுவது மிகவும் கஷ்டமான காரியம். பிறகு இறைவன் சித்தம்.

No comments :

Post a Comment