Monday, June 8, 2020

பக்திக்கு கட்டுப்படுவான் கண்ணன்

ஒரு பெரியவர் தினமும் வீதி வழியாக கிருஷ்ண பஜகோவிந்தம் 11வது பாவத்தை பாடியபடியே வீடு வீடாகச் சென்று அன்ன யாசகம் பெற்று உண்பவர்.

ஒரு நாள் 10 வயது சிறுமி ஒருத்தி “சுவாமி, நான் தினமும் உங்களது கிருஷ்ண பஜனைப் பாடல்களை ரசித்துக் கேட்பேன் எனக்கு தாங்கள் பாடிய முழு பாடலும் மனப்பாடம் ஆயிற்று ,,அதனால் உங்களை குருவாக நினைத்து என் இல்லத்திற்கு அழைக்கிறேன் வாருங்கள் சுவாமி” என்றாள் பணிவன்புடன்.

அந்தச் சிறுமியின் இல்லத்திற்கு சென்றார் பெரியவர். சிறுமியின் இல்லத்தில் நுழைந்ததும் அவரது பாதங்களுக்கு நீர் வார்த்து கழுவி பூக்களால் பூஜை செய்து பின் தான் சாப்பிட வைத்திருந்த பழமும்,,பாலும் உண்ணக் கொடுத்தாள் அந்தச் சிறுமி ,

பின் அவளது நெசவு இயந்திரத்தின் அருகே சிக்கலான நூல்கள் அறுந்து கிடப்பதை பார்த்து ”அம்மா, எதற்கு இந்தச் சிக்கலான நூல்களை எல்லாம் குப்பை போல் வைத்து உள்ளீர்கள்” என்று கேட்க,

சிறுமி –“சாமி அது எல்லாம் கண்ணன் தன பிஞ்சுக் கைகளால் அறுத்து அறுத்து எறிந்த நூல்கள்” .

பெரியவர் திகைப்புடன் “என்னம்மா சொல்கிறாய் கண்ணன் அறுத்த நூல்களா”?

சிறுமி —“ஆமாம் சுவாமி நான் தினமும் நீங்கள் பாடிய கிருஷ்ண கீர்த்தனையை பாடி கொண்டே ராட்டினம் சுற்றுவேன் அப்பொழுது கண்ணன் சிறு குழந்தையாக இங்கு வருவான் நான் சொல்லச் சொல்ல கேட்காமல் என் பாட்டை ரசித்த படியே இந்த நூலை அறுத்து அறுத்து எறிவான். பின் மறைந்து விடுவான்” 

பெரியவர் அந்தச் சிறுமியைப் பார்த்து “அம்மா இப்பொழுது நீ பாடிக் கொண்டே ராட்டினம் சுற்று, கண்ணன் வருகிறானா என்று பார்கிறேன்” என்றார்.

சிறுமியும் பாடிக் கொண்டே ராட்டினம் சுற்றினாள்,,,,சிறிது நொடியில் ,,,,சந்தோஷமாக கத்தினாள் “சுவாமி, கண்ணன் வந்து விட்டான்” என்று.

பெரியவர் —-“எங்கே என் கண்ணுக்கு யாரும் தெரியவில்லையே” என்றார்.

சிறுமி உடனே கண்ணனிடம் “கண்ணா என் குரு நாதருக்கு ஏன் நீ தெரியல” என்றாள்.

கண்ணன் -“உன் குருநாதர் தன் வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமே எனது கீர்த்தனைகளைப் பாடுகிறார் ,,,,அதில் ,,பக்தி, பாவம், உள்ளன்பு எதுவுமே கிடையாது ,,,,அதனால் அவர் கண்ணுக்கு தெரியவே மாட்டேன் “ என்றான் கண்ணன்.

கண்ணன் சொன்னதை அப்படியே சிறுமி தன் குருநாதரிடம் சொன்னாள். அதற்கு பெரியவர் “நான் உன் குரு தானே, எப்படியாவது எனக்குக் கண்ணனைக் காணச் செய்யேன்” என்றார் கெஞ்சலாக சிறுமியிடம்.

குரு சொன்னதை கேட்ட மாய கண்ணன் ,,,,,சிறுமியிடம் “தோழியே நீ பாடு, உன் பாடலில் நான் ஆடிக்கொண்டே நூல்களை அறுத்து எறிவேன். நூல்கள் அறுவது மட்டும் அவர் கண்களுக்கு தெரியும் படி செய்கிறேன். அதை பார்த்து அவரை மகிழ சொல். இதுவும் நீ அன்பாகக் கேட்டதால் தான் செய்கிறேன். ம்ம்.. நீ பாடு” என்றான் கண்ணன்.

சிறுமியும் கண்ணன் சொன்னதை குருவிடம் சொன்னாள். அவரும் “சரி நீ பாடம்மா, இந்த பாவி அதையாவது பார்த்து, புண்ணியம் தேடிக் கொள்கிறேன்” என்றார்.

சிறுமி பாட ஆரம்பித்தவுடன், நூல்கள் தானாக அறுந்து விழுவதை பார்த்தார் பெரியவர். அப்படியே பரவசமாகி தான் செய்த தவறுக்குக் கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு, சிறுமியை வாழ்த்தி ,வீதியில் இறங்கி பாடி கொண்டே சென்றார்

இப்பொழுது அவரது கைகள் யாசகம் கேட்கவில்லை

பக்திக்கு மட்டுமே கட்டுப்படுவான் கண்ணன்.
ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்.
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா.

ஹரே கிருஷ்ணா..ஹரே ஸ்ரீ கிருஷ்ணா.

No comments :

Post a Comment