Sunday, June 14, 2020

தானம் / தர்மம்

தானத்துக்கும், தர்மத்துக்கும் வித்தியாசம் தெரியுமா?

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது.

சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார். "சூரியனே, என்ன தடுமாற்றம், உன் மனதில்" கேட்டது ஈசன்.

பரம்பொருளே, பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன். ஆனால், எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது? இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.

இறை சிரித்தது. சூரியனே, நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள்.

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்த பின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.

ஆனால்,  தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர  தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா?

கேட்ட ஈசனை வணங்கிய சூரியத் தேவன். புரிந்தது இறைவா! தானமும், தர்மமும், பாவமும், புண்ணியமும் எல்லாமும் நீயே, என்பதும் புரிந்தது என்றார்.

தானம்:

தானம் என்பது ஒருவர் கேட்டபின் அல்லது அவருக்கு தேவையானது இது என மற்றவர் சொல் கேட்டு அவரின் தேவையை பூர்த்தி செய்வது தான் தானம். பசியால் வாடும் ஒருவர் தன் பசியை கூறி கேட்டால் அது தானம், இது புண்ணிய கணக்கில் சேராது. உயர்ந்தவர்களுக்குக் கொடுப்பது தானம். தானம் என்பது பலனை எதிர்பார்த்துச் செய்வது.

வேதம் படித்தவருக்கு பூமி, வஸ்திரம் அல்லது பசு இவற்றைக் கொடுக்கும்போது சில மந்திரங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம். இதை நான் கொடுக்கிறேன், இதனால் எனக்கு இன்ன பலன் கிடைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறோம். அது தானம் என்பது.

எந்த சௌக்கியங்களை நாம் அடைய வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த சௌக்கியங்களைக் கொடுக்கக் கூடிய பொருட்களைக் கொடுப்பது தானம்.

பொதுவாக உதவி புரியும் எண்ணத்துடன் செய்யும் எந்த செயலுக்கும் இரவு, பகல் கிடையாது. தானத்தை பகலில் தான் செய்யவேண்டும். ஏனென்றால், அதற்கு சூரியதேவன்சாட்சியாக இருப்பார் என்பது ஐதீகம்.

சந்திர கிரகணம், திருமணச் சடங்கு, மாதப்பிறப்பு, வெளியூர் கிளம்பும் நேரம், ஆபத்து காலம்,குழந்தை பிறப்பு, ராமாயணம், மகாபாரத சொற்பொழிவு போன்றவற்றின் போது இரவு நேரத்திலும் தானம் செய்யலாம்.

தர்மம்

ஆனால் தர்மம் என்பது யாரும் கேட்காமல், அவருக்கே தெரியாமல் அவருக்கு செய்யக் கூடிய நன்மையாகும். அதுவே அவன் பசி அறிந்து அவன் கேட்காமலே அவனுக்கு உணவு அல்லது உதவி செய்வது தர்மமாகும். இது தான் புண்ணிய கணக்கில் சேரும். எளியவர்களுக்கு கொடுப்பது தர்மம். தர்மம் என்பது அந்தப் பலனை மனதில் நினைக்காமல் செய்வது.

தர்மம் என்பது, ஒருவரை சாலையில் பார்க்கிறோம். அம்மா, தாயே பசிக்குது, பிச்சை போடுங்கள் என்று கேட்கிறார். அவரிடம் எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கிறோம். அது தர்மம்.

ஸ்வதர்மம் என்றால் சுபாவம் என்று பொருள். உதவி செய்யக்கூடிய மனிதனின் ஸ்வபாவம் "தானேன் போகி பவதி" என்பது.  தானம் பலனை எதிர்பார்த்துச் செய்வது. தர்மம் ஸ்வபாவமாக பகவத் ப்ரீதியாகச் செய்வது.

No comments :

Post a Comment