Friday, June 26, 2020

ஆவணி அவிட்டம் [உபாகர்மா]

ஒவ்வொரு வருடம் ஆடி-ஆவணி மாதங்களில் பௌர்ணமி திதியில், திருவோணம் நட்சத்திரத்தில் வருவது ஆவணி அவிட்டம். அதற்கு உபாகர்மா என்று மற்றொரு பெயர் உண்டு. அன்று புதிய உபவீதம் [பூணூல்] அணிவார்கள். மறுநாள் காயத்ரி ஜபம். 1008 முறை காயத்ரி மந்திரம் ஜபம் செய்வார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் பொதுவாக கோயிலில் எல்லோரும் கூடி ஒரு ப்ரோகிதர் முன்னிலையில் மந்திரம் ஜபித்து பூணூல் மாற்றிகொள்வார்கள். நானும் கோயிலுக்கு செல்வது உண்டு. கடைசியில், ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவு ப்ரோகிதருக்கு தட்சணை கொடுப்பார்கள்.

என்னுடைய காது சரியாகக் கேட்காமல் போனபிறகு, என்னால் மந்திரங்களை சரியாகக் கூற முடியாததால், நான் என் வீட்டிலேயே புத்தகத்தைப் பார்த்து மந்திரங்கள் சொல்லிப் பூணூல் மாற்றிகொள்வேன். பிறகு கோயில் உண்டியலில் என்னால் முடிந்த அளவு பணம் போட்டு விடுவேன்.

சாதாரணமாக, எந்த மத சம்பந்தப்பட்ட விஷயத்திலும், தானே மந்திரங்களைக் கூறி தானே செய்து கொள்வது சரியில்லை. ஒரு ப்ரோகிதர் [குரு] மூலமாகத்தான் செய்யவேண்டும். அதுதான் நியாயம். ஆனால் எனக்கு வேறு வழியில்லை.

எனது மகனும், என்னுடன் இருக்கும்வரை, என்னுடன் சேர்ந்து கோயிலுக்கு வந்து பூணூல் மாற்றிக் கொள்வது வழக்கம். பிறகு வேலை நிமித்தம் ஹைதராபாத் வந்த பிறகு அவர், அவரது நண்பருடன் கோயிலுக்கு செல்வது வழக்கம்.

இப்போது மூன்று வருடங்களாக நான் என் மகனுடன் சேர்ந்த பிறகு, ஒவ்வொரு வருடமும் நான் தனியாக வீட்டில் பூணூல் மாற்றிக்கொள்கிறேன்.. அவர் நண்பருடன் கோயிலுக்கு செல்வது வழக்கம். நான் அவரை என்னுடன் சேரும்படி வற்புறுத்துவது இல்லை. ஏனெனில், ஒரு குருவிடம் உபதேசம் பெறுவது நல்லது. மற்றும் அவருக்குக் காது நன்கு கேட்கிறது.

No comments :

Post a Comment