Wednesday, July 17, 2019

திரு ஜெமினி கணேசன் மீது ஒரு பிரியம்

என் தந்தைக்கு சினிமா என்றாலே வேப்பங்காய், வேப்பம்பழம் கூட அல்ல. ஆனால் என் அம்மாவிற்கு சினிமா பிடிக்கும். என் அம்மாவை சந்தோஷப்படுத்துவதற்காக, என் தந்தை எங்களை சிறு வயதில் எப்போதாவது சினிமாவுக்கு அழைத்துச் செல்வார். குடும்பத்துடன் சினிமா பார்ப்பது ஒரு தனி சந்தோஷம்.

அப்படி அவர் முதன்முதலில் எங்களை அழைத்துச் சென்றது திரு ஜெமினி கணேசன் நடித்த கணவனே கண் கண்ட தெய்வம் 1955]. அதன் பிறகு நிறைய நாட்கள் கழித்து மறுபடியும் ஜெமினி கணேசன் நடித்த கற்புக்கரசி [ 1957]. அதன் பிறகு மறுபடியும் ஜெமினி கணேசன் நடித்த மணாளனே மங்கையின் பாக்கியம் [1957].

இப்படி நான் சிறுவயதில் பார்த்த எல்லா திரைப்படங்களும் திரு ஜெமினி கணேசன் நடித்த படங்களாக இருந்தது. அதனால் திரு ஜெமினி கணேசன் மீது ஒரு பிரியம் உண்டு. ஆனால் நான் அவருடைய விசிறி கிடையாது. பைத்தியமாக அவருடைய படங்களைப் பார்த்தது இல்லை. எந்த ஒரு சினிமா நடிகர் மீதும் எனக்கு ஒரு கவர்ச்சி ஏற்பட்டது இல்லை.

அவர் ஒரு அழகான திரைப்பட நடிகர். நன்கு படித்தவர். அழகாக நடிக்கக் கூடியவர். மிகையான நடிப்பு செய்யாதவர். தன்னுடைய கதா பாத்திரத்தை உணர்ந்து நடித்தவர்.. காதல் காட்சிகளில் இயற்கையாக நடித்தவர்.. நகைச்சுவை மற்றும் சோகக் காட்சிகளிலும் சிறப்பாகச் செய்தவர்.

அரசியல் போன்ற விவகாரங்களில் தலையிடாமல் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்தவர்.. தன்னால் முடிந்த அளவு கஷ்டப் படும் மக்களுக்கு உதவி செய்தவர்.. மென்மையான குணம் கொண்டவர். அநாவசியமாக பிரச்சனைகளில் தலை இடாமல் ஒதுங்கி இருந்தவர்.

"எல்லோரும் எனக்கு நண்பர்கள். யாரும் எனக்கு விரோதி இல்லை" என்ற சிறந்த குறிக்கோள் கொண்டவர். முதல் கதாநாயகனாக இருந்தாலும் சரி, இரண்டாவது கதாநாயகனாக இருந்தாலும் சரி எதையும் சமமாகக் கருதும் குணம் கொண்டவர். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எனக்குத் தெரியாது.

தமிழக திரைப்பட இயக்குநர்களில் திரு ஸ்ரீதர் ஒரு தனி இடத்தைப் பெற்றவர். எல்லோருக்கும் ஒரு வழிகாட்டியாக இருந்தவர். காதல் உணர்வுகளைப் பல கோணங்களில் அழகாகக் காட்டியவர். ஆரம்ப நாட்களில் அவர் திரு ஜெமினி கணேசனை வைத்து நிறைய படங்களை இயக்கியவர். யாரால் யார் சிறப்படைந்தனர் என்பது ஒரு கேள்விக் குறி.

ஒரு காலகட்டத்தில் திரு ஸ்ரீதர் சொந்தமகத் திரைப் படங்கள் எடுக்கும் போது, செலவைக் குறைக்க புதுமுக நடிகர்களை அறிமுகப் படுத்தினார். அந்த முயற்சியில் அவர் வெற்றியும் அடைந்தார். மற்றவர்களும் அவரைப் பின் பற்றினர். தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

அதில் நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற படம் மிகவும் பாராட்டப் பட்டது. அப்போது திரு ஜெமினி கணேசன் அந்தப் படத்தில் தான் நடிக்கவில்லையே என்று தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்திருந்தார். அந்தப் படத்தில் டாக்டர் கதா பாத்திரத்தில் அவர் நடித்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

அவருடைய திரைப் படங்களை யாரும் நன்றாக இல்லை என்று கூற மாட்டார்கள். அவருடைய திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது 1. கணவனே கண் கண்ட தெய்வம். 2. பெண்ணின் பெருமை. 3. யார் பையன். 4. சுமை தாங்கி. 5. கல்யாணப் பரிசு. 6. பாசமலர். 7. கொஞ்சும் சலங்கை. 8. நான் அவன் இல்லை. 9. புன்னகை. 10. ராமு. உங்களுக்குப் பிடித்தது எது?



No comments :

Post a Comment