Monday, July 6, 2020

நாய்க் குட்டிகள் விற்பனைக்கு

"நாய்க் குட்டிகள் விற்பனைக்கு" என்று எழுதிய பலகையை, தனது கடையின் கதவுக்கு மேல் மாட்டிக் கொண்டிருந்தார் அதன் உரிமையாளர்.

அந்தப் பலகை குழந்தைகளை வெகுவாகவே ஈர்க்கும் என்றும் நினைத்தார் அவர். அதன் படியே ஒரு சிறுவன், கடையின் முன்னே வந்து நின்றான்.

நாய்க் குட்டிகளை நீங்கள் என்ன விலைக்கு விற்கப் போகிறீர்கள் ? என்று கேட்டான். 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை என்று கடைக்காரர் பதில் சொன்னார். நான் நாய்க் குட்டிகளைப் பார்க்கலாமா? என்று கேட்டான்.

கடை உரிமையாளர் புன்னகைத்து, உள் பக்கமாக திரும்பியே விசிலடித்தார். நாய்க் கூண்டிலிருந்து பந்துகளைப் போல, ஐந்து குட்டியூண்டு நாய்க் குட்டிகள் வேக வேகமாக ஓடி வந்தன.

ஒரே ஒரு குட்டி மட்டும் மிகவும் பின் தங்கி மெல்ல மெல்ல மெதுவாகவே ஓடி வந்தது. பின் தங்கி, நொண்டி நொண்டி தயங்கியே வந்த அந்த நாய்க் குட்டியை கவனித்த அந்த சிறுவன், ஏன், என்னாச்சு அதுக்கு ? என்று கேட்டான்.

அந்தக் குட்டி நாயைப் பரிசோதித்த கால் நடை மருத்துவர், அதற்குப் பின் கால் தொடைப்பகுதி சரியாக வளர்ச்சி அடையவில்லை. எனவே எப்போதும் முடமாகவே தான் இருக்கும் என்று, கூறி விட்டதாகவே சிறுவனிடமும் விளக்கினார் கடைக்காரர். சிறுவனின் முகத்திலே ஆர்வம். இந்தக் நாய்க் குட்டி தான் எனக்கு வேணும் என்றான்.

தம்பி, அப்படின்னா நீ அதுக்குக் காசே கொடுக்க வேணாம். நான் அதை உனக்கு இலவசமாகவே தருகிறேன் என்றார் கடைக்காரர். அந்தக் குட்டிப் பையனின் முகத்தில் இப்போது சிறு வருத்தம்.

கடைக்காரரின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து விரலை நீட்டிச் சொன்னான். நீங்க ஒண்ணும் எனக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டாம். மற்ற நாய்க் குட்டிகளைப் போலவே, இதுவும் விலை கொடுத்து வாங்கத் தகுதியானது தான். 

நான் இந்தக் குட்டிக்கு உரிய முழுத்தொகையையும் கொடுக்கிறேன். ஆனால், இப்போது எங்கிட்ட கொஞ்சம் தான் பணம் இருக்கு. பாக்கித் தொகையை அடுத்த வாரம் தருகிறேன் என்றான்.

ஆனாலும் கடைக்காரர் விடவில்லை. பையா, இந்த நாய்க் குட்டியால, உனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. இதனால் மற்ற நாய்க் குட்டிகளைப் போல, ஓடி ஆடி விளையாட முடியாது, துள்ளிக் குதிக்கவும் முடியாது, உன்னோட விளையாடவும் முடியாது என்றார்,

உடனே, அந்தப் பையன் குனிந்து தனது இடது கால் பேண்டை உயர்த்தினான். வளைந்து, முடமாகிப் போயிருந்த அந்தக்காலில், ஓர் உலோகப்பட்டை மாட்டப்பட்டிருந்தது.

இப்போது அவன் கடைக்காரரை நிமிர்ந்து பார்த்துச் சொன்னான். என்னாலும் தான் ஓடி ஆட முடியாது, குதிக்க முடியாது. இந்தக் குட்டி நாயின் கஷ்டத்தைப் புரிஞ்சிக்கிறவங்க தான் இதுக்கு இப்போதைக்குத் தேவை  என்றான்.

கடைக்காராரின் கண்களில் கண்ணீர் வழிந்து சிறுவனை உடனே பற்றி இறுகவே கட்டி அணைத்துக் கொண்டார். இந்த உலகில் பல தரப்பட்ட மனிதர்கள் நிறைய பேர் வாழ்கிறார்கள். ஆனால் மனிதநேயதுடன் வாழ்பவர்கள் எத்தனைப் பேர்?

உன் வலியை உன்னால் உணர முடிந்தால், நீ உயிரோடு இருக்கிறாய் என்று அர்த்தம். பிறர் வலியையும் உன்னால் உணர முடிந்தது என்றால், அப்போது தான் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம்.

No comments :

Post a Comment