Sunday, November 24, 2019

சூத்ரதாரி ஸ்ரீகிருஷ்ணர்

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் குருஷேத்திர போர் தந்திரங்களில், விதுரரை போரில் ஈடுபடாமல் காத்ததும் ஒன்று. யார் இந்த விதுரர்?

விதுரர், திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் ஒன்றுவிட்ட சகோதரன். மகாநீதிமான், தருமத்திலிருந்து சிறிதளவும் வழுவாதவர். அவர் மகாவீரர்கூட. அவருடைய வில் அவர் கையில் இருக்கும்வரை அவரை யாரும் வீழ்த்த முடியாது என்பதும் பிரசித்தமான விஷயம்.

இந்த விதுரருடைய பூர்வாசிரமக் கதை என்ன?

மாண்டவ்யர் என்பவர் ஒரு பெரிய ரிஷி. ஒரு நாள், சில திருடர்கள் அவர் முன் அரண்மனையிலிருந்து களவாடிய பொருள்களைப் போட்டுவிட்டு அவருடைய ஆசிரமத்தில் ஒளிந்துகொண்டனர். அரசருடைய ஆட்கள் அங்கு வந்து அவர் சமாதியில் பேசாமல் இருப்பதைப் பார்த்து அவர் பாசாங்கு செய்வதாக நினைத்து அவரையும் மற்ற திருடர்களையும், களவு சாமான்களுடன் அரண்மனைக்கு இழுத்துச் சென்றார்கள்.

அரசனுக்குத் தகவல் சொன்னார்கள். அரசனும் தீர விசாரிக்காமலேயே யாவரையும் கழுமரத்தில் ஏற்றச் சொல்லிவிட்டான். எல்லாத் திருடர்களும் இறந்தனர். ஆனால் மாண்டவ்யரோ தன் யோக பலத்தினால் உயிருடன் இருந்தார். அரசன் இதைக் கேள்விப்பட்டு உடனே அவரை விடுவிக்கச் சொன்னான். 

காவலாளர்களால் அவரை கழுமரத்திலிருந்து விடுவிக்க முடியவில்லை. அதனால் தலைக்கு மேலேயும் ஆசனத்துக்கு கீழேயும் இருந்த பகுதியை வெட்டி எடுத்தனர். அதனாலேயே அவருக்கு ஆணி மாண்டவ்யர் என்று பெயர் வந்தது.

மாண்டவ்யர் அரசனிடம் கோபப்படாமல் நேரே எமதர்மராஜனிடன் சென்று, “எனக்கேன் இப்படி ஒரு தண்டனை? நான் என்ன பாபம் செய்தேன்?” என்று கேட்டார். எமன் சொன்னார், “ரிஷியே, நீர் சின்ன வயதில் ஈக்களைக் கொன்று ஒரு குச்சியில் கோத்து விளையாடுவீர். நீர் செய்த ஜீவ இம்சைக்குத்தான் இந்த தண்டனை” என்றார்.

ரிஷிக்கு மகா கோபம் வந்துவிட்டது. “தர்மராஜரே, நீர் தருமத்தின் காவலர். உமக்குத் தெரியாதா? தண்டனை கொடுக்கும் முன் குற்றவாளியின் வயது, அவனுடைய அறிவுத்திறன் அறிந்து குற்றத்திற்கு ஏற்ற தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்பது நியதி.

நான் செய்தது அறியாப் பருவத்தில். என் குற்றத்திற்கு நீர் அளித்தது பெரிய தண்டனை. நீர் தருமத்திலிருந்து தவறிவிட்டீர். இதோ நான் உமக்கு ஒரு சாபமிடுகிறேன். நீர் பூலோகத்தில் மானிடனாகப் பிறந்து நான் பட்ட அவமானத்தை விட நூறு மடங்கு அவமானத்தை அடைவீர்” என்று சாபமிட்டார்.

அந்த சாபத்தின் பாதிப்பு தான், எமதர்மராஜர் விதுரராகப் பிறந்தது. இப்போது, மறுபடியும் கதைக்கு வருவோம்.

விதுரர் அப்பழுக்கில்லாதவர். மற்ற பெரியவர்கள் செய்த பிழையை அவர் செய்யவில்லை. துணிந்து, துரியோதனனையும் அவன் சகோதரர்களையும் கண்டித்து திரெளபதிக்காக வாதாடினார். அதனால் தருமம் தவறாத அவரை எப்படி யுத்தத்தில் சாகடிக்க முடியும். மேலும் பாண்டவர்கள் பக்கத்தில் தரும புத்திரர் (எமனின் மகன்) எதிர்பக்கம், அவர் தந்தை-தர்மராஜர் – சமநிலை சரியாக வராதே?

விதுரர், கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம் இல்லை. மகாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி இருக்க வாய்ப்பு உண்டு. அதனால் எல்லோரையும்விட மிக முக்கயமான நபர், விதுரர் தான். அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போராடக் கூடாது. எப்படித் தடுப்பது?

பாரதப் போரைத் தடுக்க, ஸ்ரீகிருஷணர் பாண்டவர்களுக்காகத் தூது சென்றான். ஸ்ரீகிருஷ்ணர் யார் வீட்டில் தங்குவார் என்ற கேள்வி பிறந்தது. கிருஷ்ணரோ, “நான் தூதுவன்.  நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்” என்றார். விதுரருக்கு மகா சந்தோஷம். தன் பிரியமான கண்ணன் தன் விருந்தினராக வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார். 

கண்ணன் சென்ற பின் துரியோதனன் சபையில் எல்லோரும் அவனிடம் கெஞ்சி, கண்ணன் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று வாதாடினார்கள். விதுரர் குரல் ஓங்கி ஒலித்தது. ஏற்கனவே துரியோதனனுக்கு விதுரர்மேல் கோபம். அவர் பாண்டவர்கள் கட்சி என்று ஒரு நினைப்பு. போதாக்குறைக்கு விதுரர் பாண்டவ தூதரான கண்ணனைத் தன் வீட்டில் உபசரணைசெய்தது. விதுரர் பேச்சைக் கேட்டவுடன், துரியோதனனுக்குக் கோபம் வந்தது.

என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப்படுத்திப் பேசினான். குறிப்பாக, அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான். (மாண்டவ்யர் சாபம் முற்றிலும் பலித்துவிட்டது)

விதுரருக்கு கோபம், வருத்தம் சபையோர்கள் நடுங்க சபதமிட்டார். “எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை. அழிவு காலம் நெருங்கிகொண்டிருக்கிறது. என்னை அவமானப்படுத்திய இந்த துரியோதனனுக்காக நான் என் வில்லை எடுத்துப் போராட மாட்டேன். அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்ல மாட்டேன்” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார். .

கண்ணன், விதுரர் வீட்டில் தங்காமல் இருந்தால், விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருப்பாரா? துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் அவருக்கு வந்திருக்கும் அல்லவா?அவரை வெல்ல, பாண்டவர்கள் கட்சியில் யாராவது இருக்கிறார்களா? பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்திருக்குமா?

இதுதான் கண்ணனுடைய பெருந்திட்டம்!! கடைசியில் அந்த திட்டத்தில் வெற்றியும் பெற்றார். மகாபாரத்தின் சூத்ரதாரி பகவான் ஸ்ரீகிருஷ்ணர்‬ தானே?

No comments :

Post a Comment