Saturday, March 17, 2018

மனதில் தோன்றிய எண்ணங்கள் 196 TO 210

196. விவாதிப்பது எனக்குப் பிடிக்கும். அது ஆரோக்கியமானது. ஆனால் எதிர்த்துப் பேசுவது பிடிக்காது. அது அநாவசியமாக மனஸ்தாபத்தை உண்டு பண்ணும்

197. தாவரங்கள், விலங்குகள் இவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது ஆறறிவு படைத்த மனிதனால் எந்த வித பலன்களும் கிடையாது. இதில் அஹங்காரம் வேறு.

198. என்னால் எதையும் பொறுத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் இந்த அஹங்காரம் என்ற ஒரு குணத்தை மட்டும் கொஞ்சம் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை

199. நமது நாட்டில் ஓரளவு ஒழுங்காக ஓடிக்கொண்டு இருப்பது நீதிமன்றங்கள் தான்.அதையும் கெடுத்துத் தொலைத்து விடுவார்கள் போல் பயம் தோன்றுகிறது

200. பண்டிகை நாட்களில் பலவித பணியாரங்கள் செய்வதைத் தவிர்த்து, "உபவாசம்" தான் சிறந்தது என்று கூறினால் அதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்களா?

201. நகைச்சுவை உணர்வு மிகவும் முக்கியம். அதற்காக நகைச்சுவை என்ற பெயரில் உளறக் கூடாது. அது மற்றவருடைய நகைச்சுவை உணர்வைக் கெடுத்துவிடும்.

202. ரெடிமேட் உபதேசங்களைத் தேடிப் போகாதீர்கள். அவை நடைமுறைக்கு சிறிதும் ஒத்து வராது. உங்கள் வாழ்க்கை அனுபவங்களைக் கூறுங்கள்.அது போதும்.

203. ஒருவர் எப்போதும் தனது தகுதி அறிந்து பேசவேண்டும். தனது அறிவுக்கு எட்டாத விஷயங்களைப் பற்றி பேசக்கூடாது. பைத்தியம் என்று சொல்வார்கள்.

204. காற்று இசையாகும் வாசித்தால். வார்த்தை கவிதையாகும் யோசித்தால். இவ்வுலகம் நட்பாகும் நேசித்தால், இறைவனின் அருள் கிட்டும் யாசித்தால்.

205. "மெலடோனின்" மனித மூளையில் இரவில் உற்பத்தி ஆகிறது. உறக்கம் வருவதற்கு இதுவே முக்கிய காரணம். இது இல்லாவிடில் உறக்கம் பாதிக்கப்படும்.

206. வெளுத்தது எல்லாம் பால் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது

207. பெண்கள் வீரத்தை விரும்பியது அந்தக் காலம். விவேகத்தை விரும்பியது கடந்த காலம். சமத்துவத்தை விரும்புவது நிகழ் காலம். எதிர் காலத்தில்?

208. யாரைப் பற்றியும்,எதைப் பற்றியும், எப்படி வேண்டுமானாலும் பேசுவதற்கு,எழுதுவதற்கு தரப்பட்டுள்ள உரிமைக்கு மறு பெயர் கருத்து சுதந்திரம்

209. உச்ச நீதி மன்ற தீர்ப்பை விமரிசனம் செய்யும் அளவுக்கு நமது நாட்டில் அறிவு ஜீவிகள் இருக்கிறார்கள் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம் தான்.

210. அரசியல்,மதம்,ஜாதி, சினிமா இவை நான்கும் தனி மனித அபிப்பிராயம்.யாரும் எந்த முடிவுக்கும் வர முடியாது. வீண் வாக்குவாதம் தான் மிஞ்சும்.



No comments :

Post a Comment