Saturday, August 28, 2021

அய்யாவா? ஐயாவா?

சிலர், "ஐயா"என்று எழுதுகின்றனர். ஆனால், சிலர் "அய்யா" என்று எழுதுகின்றனர். எப்படியும் எழுதலாம் என்பது ஒருமுறை, இலக்கணம் இப்படித்தான் கூறுகிறது, எனவே, அப்படித்தான் எழுத வேண்டும் என்பது ஒருமுறை,

எதுசரி?

"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி" தமிழ்க்குடியாகும். உயிர் உடல் ஆயுதம் இவற்றோடு தோன்றிய தமிழர், தாம் பேசும் தமிழ் மொழியிலும் உயிர் எழுத்துக்களையும். மெய்யெழுத்துக்களையும் ஆயுத எழுத்துக்களையும் உருவாக்கிச் சங்கம் வைத்து ஆராய்ந்து தமிழ் மொழியை வளர்த்துள்ளனர்,

ஒரு இயந்திரத்தைத் தயாரித்தவர், அதற்கான Operation Manual கொடுப்பது போன்று, சங்கத்தமிழர் தமிழுக்கு இலக்கணம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர்,

தமிழில் எழுத்துக்களை குறில் எழுத்துக்கள் என்றும் நெடில் எழுத்துக்கள் என்றும் ஒற்றெழுத்துக்கள் என்றும் பிரித்துள்ளனர். குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். மெய்யெழுத்துக்கள் அரைமாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். 

எனவே தமிழில் ஒவ்வொரு சொல்லும் மிகவும் சிறப்புப் பெற்றனவாகத் திகழ்கின்றன. உதாரணமாக "மகன்" என்று சொல்லுக்கும் "மகான்" என்ற சொல்லுக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. பகவனுக்கும் பகவானுக்கும் வேறுபாடு உண்டு. இவ்வாறாகப் பல உதாரணங்களைக் கூறலாம். 

எனவே சொல்லில் உள்ள எழுத்துக்களின் ஒலிஅளவைக்கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ பொருள் மாறுபடும். சிலர், "ஐயா"என்று எழுதுகின்றனர். ஆனால், சிலர் "அய்யா" என்று எழுதுகின்றனர். 

ஐயா என்ற சொல்லில் "ஐ" என்பது நெடில் எழுத் தாகும். இரண்டு மாத்திரை அளவு உள்ளது. ஆனால், "அ" என்பது குறில் ஒரு மாத்திரை அளவு உள்ள தாகும். "ய்"என்பது மெய் யெழுத்து அரை மாத்திரை அளவு உள்ளதாகும், எனவே "அய்" என்று எழுதினால் ஒன்றரை மாத்திரை அளவு தான் ஒலிக்கும்.

ஐ நெடில் = 2 அளவு

அ குறில் = 1 அளவு

ய் ஒற்று = ½ அளவு

அய் = 1+½ = 1 ½ அளவு

"ஐ" என்றால் தமிழில் தலைவன் என்று பொருள். "ஐயா" என்றால் "தலைவா" என்று மரியாதை நிமித்தமாக அழைப்பது என்று பொருள். "அய்" என்றால் பொருள் ஏதும் இல்லை. "அய்யா" என்றாலும் பொருள் ஏதும் இல்லை!

எனவே மரியாதை நிமித்தமாகப் பயன்படுத்தும் ஒரு சொல்லைக் குறைத்து ஒலிப்பதும் கூறுவதும் எழுதுவதும் தவறாகும். நாம் செய்யும் மரியாதையில் பிழை ஏற்பட்டு விடும்.

எனவே "ஐயா" என்றே கூறவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும். "அய்யா" என்ற பொருளற்ற சொல்லைத் தவிர்க்கலாம், 

 

No comments :

Post a Comment