Monday, August 23, 2021

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1711 TO 1725

1711. சங்கு சக்கரத்தோடு மகாவிஷ்ணு வந்து உபதேசம் செய்ய மாட்டார். நம் நல விரும்பிகள் மூலம் சொல்லுவார்.அதைக் கேட்பதும் விடுவதும் நம் இஷ்டம். 

1712. பலர் வெற்றி தன்னைத் தேடி  வரவில்லையே என்று வருத்தப் படுகிறார்கள். அது தவறு. அவர்கள் தான் வெற்றியைத் தேடிப் போக வேண்டும்.

1713. கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. பிச்சை எடுத்தாவது கல்வியை கற்க வேண்டும். பிறகு  எல்லா விதமான  சந்தேகங்களும் அகன்று விடும்.

1714. சமூக அந்தஸ்த்தில் உள்ள சிலர், கற்றறியாமல் கூறும் சில அபத்தங்களை, உண்மை என்று பாமரர்கள் நம்புவது, மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

1715. அதிகமாகப் பேசாதவர்களை உலகம் விரும்புகிறது. அளந்து பேசுபவர்களை உலகம் மதிக்கிறது. நன்கு செயலாற்றுபவர்களை உலகம் கைகூப்பி வரவேற்கிறது.

1716. தன்னை ஒரு புத்திசாலி என்று நினைப்பவன் உண்மையில் ஒரு  முட்டாள். மற்றவரை முட்டாள் என்று நினைப்பவன் அவனை விட மோசமான முட்டாள்.

1717. 18 வயதில் பெண்ணிற்கு திருமணம் செய்ய வேண்டும். வயது ஆக ஆக மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பதற்கு உள்ள சாத்தியக்கூறுகள் அதிகம்.

1718. கணவன் மனைவி ஒற்றுமையில் ஒரு ரகசியம் இருக்கு. மனஸ்தாபம் வரும் பொழுது மன்னிப்பு கேட்பதில் யார் முதலில் என்று போட்டி இருக்க வேண்டும்.

1719. மனைவி வெளியே தெரிய அழுகிறாள். கணவன் உள்ளே அழுகிறான். பிரச்சனையை வளர விடக்கூடாது. அன்றையப் பிரச்சனையை அன்றே தீர்த்து விட வேண்டும்.

1720. கணவன் மனைவி இடையே சண்டைக்குப் பின் வரும் சமாதானம் சிறந்தது. அதைவிட இருவர் இடையே எந்த ஒரு சண்டையும் இல்லாத சமாதானம் மிகச் சிறந்தது.

1721. லஞ்சம் சமூகத்தில் ஊடுருவிய ஒரு புற்று நோய். வாங்குபவனும், கொடுப்பவனும் மறுத்தால் அன்றி சமூகத்தில் இருந்து அதை ஒழிக்கமுடியாது.

1722. உங்கள் மனதைக் கேளுங்கள்.காமம், கோபம், ஆசை, பற்று, கர்வம், பொறாமை இவை எல்லாம் உள்ளே இல்லை என்றால் உங்களுக்கு மோட்சம் மிக அருகில்.

1723. நமது பார்வை நன்றாயிருந்தால் உலகம் அழகாகத் தெரியும். வாக்கு நன்றாயிருந்தால் உலகம்  நேசிக்கும். இதயம் நன்றாயிருந்தால் உலகை வெல்லலாம்.

1724. காரணம் தெரியவில்லை. மனைவியுடன் மனஸ்தாபம். இரவு சளி பிடித்தது, தைலம் தடவினாள், மன்னிப்புக் கேட்டேன். வைரஸ் ஆக வந்தது யார் தெரியுமா?

1725. நான் நினைக்கிறேன், நல்லவர்களை காக்கவும், கெட்டவர்களை அழிக்கவும் இறைவன் கலியில் , வைரஸ் / பாக்டிரியா வாக அவதரித்துள்ளான்.

 

No comments :

Post a Comment