Sunday, April 5, 2020

வாழ்க்கை என்பது

சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில், அதை காலில் தான் அணிய முடியும். குங்குமத்தின் விலை மிகக்குறைவு, அதை நெற்றியில் தான் அலங்கரித்துக் கொள்வார்கள். இங்கு விலை முக்கியமில்லை, அதன் பெருமை தான் முக்கியம்.

உப்பு போன்ற கடினமான வார்த்தைகளால் நம்மை திருத்துபவன் உண்மையான நண்பன். சர்க்கரை போன்ற இனிப்பான வார்த்தைகளால் நம்மை புகழ்பவன் நண்பன் அல்ல. புழுவுற்ற உப்பும் புழுவுறாத இனிப்பும் இவ்வுலகில் உள்ளதாக வரலாறு இல்லை.

இங்குகோயில்கள், மசூதிகள், திருத்தலங்கள் வேடிக்கையானவை, பணக்காரன் உள்ளே சென்று பிச்சை எடுக்கிறான். ஏழை வெளியில் நின்று பிச்சை எடுக்கிறான், ஆக ஏதோ ஒரு வகையில் அனைவரும் பிச்சை எடுப்பவர்களே.

காணாத கடவுளுக்கு பஞ்சாமிர்தம் படைப்பார்கள். கண்கண்ட ஏழைக்கு பழைய சோறும், கிழிந்த துணியும் கொடுப்பார்கள். மனிதப் பிறவி சரியாக உணரப்படவில்லை,

ஏனெனில் பிறக்கும்போதும் அழுகை, சாகும்போதும் அழுகை, இடையில் எல்லாம் நாடகம். தீங்கு விளைவிக்கும் மது விற்கும் இடத்திற்கு ஓடோடி போவான்,

அமுதமாம் பால் விற்பவர் வீடு வீடாக தெருத் தெருவாக வெயிலில் சுற்றுகிறார். பால்காரர் பாலில் தண்ணீர் ஊற்றுகிறார் என்று சண்டையிடுவார்கள், தண்ணீரில் நஞ்சுகளை கலந்து விற்கும் பானங்களைக் கொண்டாடுவார்கள்.

மாலை போட்ட மனிதன் வந்தால் அவர் முன்னால் ஊரேகூடி கொண்டாடும். மாலை போட்ட மனிதனின் பிணம் வந்தால் எல்லோரும் பிணத்திற்கு பின்னால் வருவார்கள்.

மனிதனின் பிணத்தை தொட்டால் அல்லது பார்த்தால் தீட்டு எனக்குளிக்கும் மனிதன், வாயில்லா ஜீவன்களை பிணமாக்கி வகைவகையாச் சமைத்து விழா எடுப்பார்கள்.

இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை. இதுக்கெதற்கு கோபம், விரோதம், வீண்பழி, கொலை, கொள்ளை, காழ்ப்புணர்ச்சி? எது நமதோ அது வந்தே தீரும். யாராலும் தடுக்க முடியாது.

நமதில்லாதது...நமக்கில்லாதது...எது செய்தாலும் வராது. யாராலும் தரவும் முடியாது. வாழ்க்கை என்பது சாகும் வரை அல்ல. மற்றவர்கள் மனதில் வாழும் வரை....வாழ்ந்து காட்டுவோம்.... மற்றவர்களின் இதயத்தில்....

No comments :

Post a Comment