Sunday, September 3, 2023

தொடர்பும் இணைப்பும்.

ஒரு துறவியிடம் நியூயார்க் பத்திரிக்கையாளர் ஒருவா் பேட்டி எடுக்க ஆரம்பித்தார்.


நிருபர் : ஐயா!உங்களுடைய முந்தைய சொற்பொழிவில் “தொடர்பு”மற்றும் “இணைப்பு”என்பது பற்றிப் பேசினீர்கள்! அது உண்மையிலேயே மிகவும் குழப்பமாக இருந்தது. சற்று விளக்கிச் சொல்ல முடியுமா? என்றார்.


துறவி: (புன்முறுவலோடு) நிருபர் கேட்ட கேள்வியிலிருந்து விஷயத்தைத்  திசை திருப்புகின்ற விதமாக, அந்த நிருபரிடம் கேள்வி கேட்டார். நீங்கள் நியூயார்க்கில்தான் வசிக்கிறீர்களா?


நிருபர் :ஆம்.


துறவி : வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?


இந்தத் துறவி என் சொந்த வாழ்வைப் பற்றியும், தேவையற்ற கேள்விகளையும் கேட்டு தன்னுடைய கேள்விக்குப் பதில் தருவதைத் தவிர்க்க முயற்சிக்கிறார் என்று நிருபா் நினைத்தார். இருந்தாலும், துறவியின் கேள்விக்கு 

“என் தாயார் இறந்து விட்டார்., தந்தையார் இருக்கிறார். மூன்று சகோதரா்கள் மற்றும் ஒரு சகோதரி இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது என்று பதிலளித்தார்.


துறவி... முகத்திலே புன்னகையுடன், 

நீங்கள் உங்கள் தந்தையுடன் பேசுகிறீா்களா? என்று மீண்டும் கேட்டார்.


இப்போது நி்ருபா் சற்று எரிச்சலடைந்து விட்டார்.


துறவி : கடைசியாக எப்போது அவரிடம் பேசினீா்கள்?


நிருபர்: எரிச்சலை அடக்கிக் கொண்டு, 

“ஒரு மாதத்திற்கு முன்பு இருக்கலாம்” என்றார்.


துறவி: உங்களுடைய சகோதர சகோதரிகளை அடிக்கடி சந்திப்பதுண்டா? குடும்பமாக சந்தித்தது கடைசியாக எப்போது? என்றார். 


இப்போது அந்த நிருபர் நெற்றியில் வியர்வை தெரிந்தது. இதைப் பார்த்தால் துறவிதான் நிருபரைப் பேட்டி காண்பது போல இருந்தது. 


நீண்ட பெருமூச்சுடன் நிருபர் சொன்னார்: “இரண்டு வருடங்களுக்கு முன் கிருஸ்துமஸ் சமயத்தில் சந்தித்தோம்” என்று.


துறவி : எல்லோரும் சேர்ந்து எத்தனை நாட்கள் இருந்தீர்கள்?


புருவத்தின் மீது வடிந்த வியர்வையை துடைத்தவாறே நிருபர் “மூன்று நாட்கள்” என்றார்.


துறவி : உங்களுடைய அப்பாவின் அருகில் அமர்ந்து, அவரோடு எவ்வளவு நேரம் கழித்தீர்கள்?


இப்போது நிருபர் பதட்டத்துடனும் சங்கடத்துடனும் ஒரு  காகிதத்தில் ஏதோ கிறுக்க ஆரம்பித்தார்.....


துறவி: எல்லோரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவைச் சாப்பிட்டீர்களா? 


அம்மா இறந்த பிறகு நாட்களை எப்படிக் கழிக்கிறீர்கள் என்று அப்பாவிடம் கேட்டீர்களா?


இப்போது நிருபர் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் கீழே விழத் தொடங்கியது.


துறவி அந்த நிருபரின் கைகளைப் பற்றியவாறு கூறினார்....


“சங்கடப்படாதீர்கள், மனம் உடைந்து போகாதீர்கள், கவலையும் கொள்ளாதீர்கள். தெரியாமல் உங்கள் மனதை நான் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னியுங்கள். ஆனால் இதுதான் நீங்கள் “தொடர்பு மற்றும் இணைப்பு” பற்றி கேட்ட கேள்விக்கான பதில். 


நீங்கள் உங்களுடைய அப்பாவுடன் தொடர்பில் இருக்கிறீர்கள். ஆனால் அவரோடு நீங்கள் இணைப்பில் இல்லை. நீங்கள் அவரோடு இணைக்கப் படவில்லை. 


இணைப்பு என்பது இதயத்துக்கும் இதயத்துக்கும் இடையே இருப்பது.


ஒன்றாய் அமர்ந்து, உணவைப் பகிர்ந்து, ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொண்டு, தொட்டுக் கொண்டு, கை குலுக்கி, கண்களை நேருக்கு நேர் பார்த்து, ஒன்றாகச் சேர்ந்து நேரத்தை செலவிடுவதுதான் இணைப்பு (connection).


நீங்கள், உங்கள் சகோதர சகோதரிகளுடன் தொடர்பில் (contact) இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் யாரும் இணைப்பில் இல்லை என்றார்.


இப்போது நிருபர் கண்களைத் துடைத்துக் கொண்டு, “எனக்கு அருமையான மற்றும் மறக்க முடியாத பாடத்தை சொல்லித் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா” என்றார்.


இதுதான் இன்றைய வாழ்வின் நிஜமாக இருக்கிறது. வீட்டில் ஆகட்டும் அல்லது சமுதாயத்தில் ஆகட்டும் ஒவ்வொருவரும் நிறையத் தொடர்பை வைத்திருக்கின்றனர். ஆனால் இணைப்பில் இருப்பதில்லை. எல்லோருமே அவரவர் சொந்த உலகில் மிகவும் பரபரப்பாக இருக்கின்றனர்.


நாம் இது போல வெறும் “தொடா்பை” பராமரிக்காமல்,  “இணைப்பில்” வாழ்வோமாக.  நம்முடைய அன்புக்கு உரிய அனைவரோடும் அக்கரையோடும், அன்பை பகிா்ந்து கொள்வதற்காக நேரத்தைச் செலவழித்தும் வாழ்வோமாக.


அந்தத் துறவி வேறு யாருமல்ல, சுவாமி விவேகானந்தர்.

No comments :

Post a Comment