Sunday, October 11, 2020

புரிந்தால் நல்லது.

1. நான்கு கஷ்டங்கள்

இன்றைய தலைமுறையினர் பார்ப்பதற்கு சுக வாழ்க்கை வாழ்வது போல தோன்றினாலும் அவர்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் நேற்றைய தலைமுறையினறுக்குத் தெரிய வாய்ப்பில்லை. குறிப்பாக அவர்களுக்கு நான்கு கஷ்டங்கள் இருக்கின்றன.

A. சொந்தமாக ஒரு வீடு. குறைந்தது ஒரு கோடி ரூபாய் ஆகும்.

B. குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவு. குறைந்தது ஒரு குழந்தைக்கு ஒரு கோடி ஆகும்.

C. நான்கு பெற்றோர்களின் மருத்துவ செலவு தலைக்கு 25 லட்சம் வீதம் ஒரு கோடி ஆகும்.

D. ஓய்வு பெற்றபின் வாழ்வதற்கு முதலீடு குறைந்தது ஒரு கோடி வேண்டும்.

இந்த ஐந்து கோடியை 25 வருடங்களில் சேமிக்க மாதம் இரண்டு லட்சம் சேமிக்க வேண்டும். வருமானமே ஒரு லட்சம் இல்லாத போது எப்படி சேமிப்பது? புரிந்தால் நல்லது.

2. விட்டுக் கொடுத்தவர்கள், கெட்டுப் போவதில்லை.

இறைவனின் படைப்பே அற்புதமானது. ஆணும் பெண்ணும் உடலாலும், மனதாலும், எண்ணத்தாலும், செயலாலும் மிகவும் மாறுபட்டவர்கள். மனக் கஷ்டம் வரும்போது பெண் வெளியே தெரிய அழுகிறாள். ஆண் மனதுக்குள் அழுகிறான். ஒருவரை ஒருவர் ஆக்கிரமிப்பதே வாழ்க்கையில் அவர்களது குறிக்கோள்.

ஒருவர் ஆக்கிரமிக்கும் போது, மற்றவர் விட்டுக் கொடுத்தால் அவர்களது வாழ்க்கை இனிமையாக இருக்கும். இல்லாவிடில் துன்பம் தான். விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போனவர்கள் வீட்டுக் கொடுத்தது இல்லை. புரிந்தால் நல்லது.

3. எதிர்பார்ப்பதும், மதிப்பீடு செய்வதும்.

நாம் எப்போதும் யாரிடமாவது, ஏதாவது எதிர்பார்த்துக் கொண்டே [EXPECTATION] இருக்கிறோம். அது நடக்காவிடில் நமக்கு மனவருத்தம், ஏமாற்றம், கோபம் எல்லாம் உண்டாகிறது. எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால் சந்தோஷமாக இருக்கலாம் இல்லையா?

நாம் எப்போதும் பிறரை மதிப்பீடு [JUDGING] செய்து கொண்டே இருக்கிறோம். அவர்களை மதிப்பீடு செய்ய நாம் யார்? அதனால் நமக்கு என்ன பலன்? முதலில் நம்மை நாமே மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். அப்போது நமது குறைகள் நமக்குத் தெரியும்.

பிறரிடம் எதிர்பார்ப்பதும், அவர்களை மதிப்பீடு செய்வதும் நல்லதல்ல. அது நமக்கு சந்தோஷத்தை தராது. கஷ்டத்தைத் தான் உண்டு பண்ணும். புரிந்தால் நல்லது. 

4. முயற்சி உடையார், இகழ்ச்சி அடையார்.

பிறருடைய பதிவை காப்பி எடுத்தால் அது அவருடைய குழந்தை. நாமே சொந்தமாக எழுதினால் அது நமது குழந்தை. நமது தினசரி வாழ்க்கையில் எவ்வளோ நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதை தமிழிலோ, ஆங்கிலத்திலோ நமது கற்பனையில் எழுதலாம். 

ஒரு வரி, இரண்டு வரியாகும். இரண்டு வரி நாலு வரியாகும். நாலு வரி ஒரு பக்கமாகும். அதில் ஏற்படும் மகிழ்ச்சியே தனி. முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கே உங்கள் திறமையை பற்றி ஆச்சரியமாக இருக்கும். உங்களால் முடியாதது ஒன்றும் இல்லை. புரிந்தால் நல்லது.


No comments :

Post a Comment