Wednesday, October 7, 2020

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1531 TO 1545

1531. நமது வாழ்க்கையில் படிப்பு அறிவையும், அனுபவம் பண்பாட்டையும், வயது ஞானத்தையும், மனோபாவம் குணத்தையும் நமக்குப் பரிசாகக் கொடுக்கிறது.

1532. ஒரு மாணவன் கல்வியில் வெற்றி பெற முக்கியக் காரணங்கள் படிப்பில் ஆர்வம், வகுப்பில் கவனம், விடாமுயற்சி, வெற்றி அடைய வெறி இவைகள் தான்.

1533. ஒரு மாணவன் பாடங்களைப் புரியாமல்  மனப்பாடம் செய்து  95% மதிப்பெண் பெறுவதை விட,  புரிந்து கொண்டு 80% மதிப்பெண் பெறுவது சிறந்தது.

1534. சிரிப்பு பலர் விரும்பும் இனிப்பு, வெறுப்பு பலர் தவிர்க்கும்  புளிப்பு, அஹங்காரம் பலர் வெறுக்கும் கசப்பு, கோபம் பலர் அடையும் காரம்.

1535. சுயநலம் கருதாது பிறருக்கு உதவி செய்யும் நேரம், சம்பாதிப்பதில் கொஞ்சமாவது ஏழைகளுக்குத் தானம் செய்யும் நேரம் சுபமுகூர்த்தம் ஆகும்.

1536. "கடன் பட்டார் நெஞ்சம் போல"என்பது முதுமொழி.இப்பொழுது எங்கும் கடன், எதிலும் கடன். கொடுக்கல் வாங்கல் செய்யாமல் ஒருவரால் வாழ முடியாதா?

1537. குடும்பம் ஒரு கோயில் என்கிறோம். திருமணத்திற்குப் படிப்பு, அழகு, பணம், குணம், மனப் பொருத்தம் இவற்றில் மனப் பொருத்தம் மிக முக்கியம்.

1538. நம் நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு அரசியல்,சினிமாவில் உள்ள ஆர்வம் பொருளாதாரத்தில் இல்லை. அவர்களின் அறியாமை, ஆர்வமின்மை காரணம்

1539. இந்திய பொருளாதாரம் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் சிலரே. அனைவரும் எல்லா  விஷயங்களையும் சந்தேகமின்றி தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1540. இந்தியா முன்னேற ஏழ்மை, அறியாமை, லஞ்சம், ஊழல், சினிமா மோகம், கட்சி அரசியல், வரி ஏய்ப்பு, மது அருந்துதல் ஆகியவை தடையாக இருக்கின்றன.

1541. ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, மகன், மருமகள், மகள், மருமகன் இவர்களிடையே உறவு நன்றாக இருந்தால் அது ஒரு சொர்க்கம்.அன்பு தான் ஒரே வழி

1542. மண்ணின் தரம் விளைச்சல், மாவின் தரம் பணியாரம், மனதின் தரம் எண்ணங்கள், வாழ்வின் தரம் வாழும் முறை, குழந்தைகளின் தரம் குணம். சரிதானே?

1543. எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு. யார் எது சொன்னாலும் மறுத்துப் பேசும் குணம் எப்படி ஒருவருக்கு வருகிறது.அதைத் தவிர்க்க முடியாதா?

1544. ஒரு பிரச்சனையில் நெருங்கியவருடன் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது மிகவும் சிறந்தது.நீங்களாகவே முடிவு எடுப்பது அவ்வளவு நல்லதல்ல

1545. மரம் நிலைத்து நிற்க வேர் முக்கியம். மூத்த குடி மக்கள் மிகவும் கஷ்டப் படுகிறார்கள். அவர்கள் சந்தோஷமாக, நலமாக வாழ வழி செய்ய வேண்டும.



No comments :

Post a Comment