Saturday, May 23, 2020

பூனைக் கதை

ஒரு பஞ்சாலையில் நான்கு பார்ட்னர்கள். பஞ்சு குடோனில் எலித் தொல்லை தாங்க முடியவில்லை. பூனை ஒன்று வளர்ப்பதென்று முடிவெடுத்தார்கள். எலிகள் அட்டகாசம் குறைந்தது. பூனை, ஓனர்களுக்குச் செல்லப் பிராணி ஆனது. நான்கு பேருமே பூனைக்குச் செல்லம் கொடுத்து, சொந்தம் கொண்டாடினர். உரிமை பேரம் முற்றி, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தனர்.

பூனையை நால்வரும், முறை வைத்து, சமமாகப் பராமரிப்பது என்று. ஓடித் துரத்தி எலி வேட்டையாட, அதன் கால்கள் வலுவானதாக இருக்க வேண்டும். எனவே, நால்வரும் அப்பூனையின் கால்களை, தலா ஒன்றாகப் பராமரித்துக் கொள்ள முடிவு செய்தனர். ஒவ்வொருவரும் அவரவர்க்கு என்று சொந்தம் கொண்டாடிய அதன் காலை சிங்காரித்தனர்.

நல்ல உணவு. கவனிப்பு. பூனையின் உடல், பூசினாற்போல வெயிட் போட்டது. கொழுத்துப் போன பூனை ஒருநாள் பஞ்சுப் பொதிகளின் உச்சியிலிருந்து, தடுமாறி கட்டாந்தரையில் விழுந்து, வலது முன்னங்கால் முறிந்து, வலியால் அழுதது.

அந்தக் காலைப் பராமரித்த உரிமைப்பட்ட முதலாளி, அதற்கு வைத்தியம் பார்த்து, காலுக்கு எண்ணெய்க் கட்டு போட்டு விட்டார். அந்தக் கால் ஒடிந்ததில் மற்ற மூன்று பார்ட்னர்களுக்கும், மனதிற்குள் அடக்க முடியாத சந்தோஷம்! அவருக்கு வேதனையான வேதனை.

ஒருநாள் இரவு பூனை, தூரமாய் எரிந்து கொண்டிருந்த ஒரு எண்ணெய் விளக்கு அருகில் கவனக் குறைவாகச் செல்ல, அதன் காலில் சுற்றியிருந்த துணியில் தீப் பற்றிக் கொண்டது. வலியால் அலறியடித்த படியே, ஆலையின் மூலை முடுக்கெல்லாம் அந்தப் பூனை தாவியிருக்கிறது.

அத்தனை பஞ்சுப் பொதிகளும் தீப்பிடிக்க, நெருப்பை அணைக்கும் முன், ஆலையே முழுதாய் எரிந்து சாம்பலானது. பங்குதாரர்களுக்குள் பெரிய சண்டை மூண்டது. வழக்கு நீதிமன்றத்துக்குப் போனது.

பூனையின் உடைந்து போன காலுக்கு, எண்ணெய்க் கட்டுப் போட்ட பார்ட்னர், மற்ற மூவருக்கும் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று அம்மூவரும் உரக்கக் கோரிக்கை வைத்தார்கள்.

இது விபத்துதான் என்றும், இதற்கு, தான் பொறுப்பேற்க முடியாது என்றும் கட்டுப் போட்டவர் வாதாடினார். மனிதாபிமான அடிப்படையில் போட்ட கட்டு, இப்படி விபரீதத்தில் முடியும் என்று, தான் சற்றும் எதிர் பார்க்கவில்லை என்று வழக்கு மன்றத்தில், அந்த ஒற்றை முதலாளி ஒற்றைக்காலில் நின்று, இறைஞ்சினார். முரண்டு பிடித்த மற்ற பார்ட்னர்கள் பிடிவாதம் தளர்த்தவில்லை.

நடுநிலை தவறாத நீதிபதி, தனித்தனி விசாரணைக்குப் பின், தீர்க்கமாக யோசித்து, தனது தீர்ப்பை எழுதி வாசித்தார்.

"பூனை தவறி விழுந்து, காலொடித்துக் கொண்டது பூனையின் குற்றம். அதன் எலும்பு முறிந்த காலுக்கு, எண்ணெய்க் கட்டுப் போட்டது அந்தக் காலைப் பராமரிப்பவரின் மனிதாபிமானம். தார்மீகக் கடமை. அந்தக் காலில் இருந்த எண்ணெய்த் துணியால்தானே இத்தனை பெரிய விபத்து நேர்ந்தது? இத்தனை நஷ்டத்துக்கும் அந்த முறிந்த காலும், அதைப் பராமரித்தவரும் ஈடு கொடுக்கக் கடமை."

ஒருவர் அதிர, மூவர் மகிழ்ச்சியில் துள்ளினர்.

"பொறுங்கள், மீதித் தீர்ப்பும் சொல்லி விடுகின்றேன்" என்ற நீதிபதி தொடர்ந்தார். "பூனை முறிந்து போன தன் வலது கால் ஒன்றின் உதவியால் மட்டுமே, அரையடி தூரம் கூட நகர முடியாது." எனவே, எண்ணெய் விளக்கு அருகில் பூனை செல்வதற்கும், கால் கட்டில் தீப்பற்றிய பின்பு, அது வலியால் ஆலை முழுதும் ஓடுவதற்கு உதவியாக இருந்து, நெருப்பு பரவுவதற்கும் காரணமாயிருந்த மற்ற மூன்று கால்களுமே, இந்த விபத்துக்குப் முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

அந்த மூன்று கால்களையும் பராமரித்த பங்குதார முதலாளிகள் மூவரும் இணைந்து, மற்ற ஒரு பார்ட்னருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய வேண்டும் என்று தீர்ப்பளிக்கின்றேன்".

இது அந்தக் காலத்து நீதிக் கதை.

No comments :

Post a Comment