Saturday, May 4, 2024

துயரங்களும், மன அழுத்தமும்.

ஒருமுறை ஒரு அப்பாவி மனிதருக்கு, அவர் செய்யாத குற்றத்துக்காக , நீதிமன்றத்தால் சரியாக விசாரனை நடத்தப்படாமல் மரணதண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த நாள் காலை அவரை தூக்கில் போட வேண்டும் என்று அந்த நாட்டின் அரசர் உத்தரவிட்டு விட்டார்.


இப்படி ஒரு தீர்ப்பு சொன்னவுடன், அவர் அரசனை நோக்கி, "அரசே!, நான் மாய மந்திரங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன், எனக்கு ஒரு வருடம் அவகாசம் கொடுத்தால், உங்கள் குதிரையை பறக்க வைப்பேன், என்னை தூக்கிலிட்டால் நான் ஆராய்ந்து வரும் மந்திரக் கலை அழிந்து நம் நாட்டுக்கு பயன்படாமல் போய்விடும்" என்று சொன்னார். 


இதைக் கேட்டுவிட்டு சிந்தனையில் ஆழ்ந்த அரசர், கடைசியில், "சரி, ஆனால் அப்படி குதிரை பறக்காவிட்டால், உன் தலையை யானையின் காலுக்குக் கீழே வைத்து நசுக்கி விடுவேன்" என்று எச்சரித்து, அவருக்கு ஒரு வருடம் காலக்கெடு கொடுத்தனுப்பினார்.


 அரசரின் குதிரையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த அம்மனிதரைப் பார்த்த அவர் மனைவி, "என்ன இப்படி செய்து விட்டீர்கள்? உங்களுக்கு என்ன மாயம், மந்திரம் தெரியும்? குதிரைக்கு எப்படி பறக்க கற்றுக் கொடுப்பீர்கள்? எங்காவது குதிரை பறந்து கேள்விப் பட்டதுண்டா?" என்று சோகமாகக் கேட்டார். 


அதற்கு அந்த மனிதர், ‘எனக்கு ஒரு வருடம் அவகாசம் இருக்கிறது. இந்த ஒரு வருடத்தில் ஒருவேளை நான் குற்றம் செய்யாதவன் என நிருபிக்கப் படலாம், அல்லது அரசர் இறந்து விடலாம், ஏன் நானே கூட இயற்கை மரணம் அடைந்து விடலாம், அல்லது இந்தக் குதிரை இறந்து விடலாம், இல்லை யென்றால், இந்தக் குதிரை பறக்கக் கூட கற்றுக் கொள்ளலாம், யாருக்குத் தெரியும்?’ என்றார்.


நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை தற்போதைய சூழ்நிலைகளை வைத்து தீர்மானிக்கத் தேவையில்லை. நாளை நடக்கப் போவதற்கு இப்போதிருக்கும் சூழ்நிலைகள் ஒரு வழிகாட்டியாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர, அவையே ஒரு தீர்மானமாக, இறுதி முடிவாக இருக்கத் தேவையில்லை


இன்றைய சூழல்களை நாளைய எதிர்காலமாக மக்கள் கற்பனை செய்து கொள்வதால்தான் அவர்களுக்கு துயரங்களும், மன அழுத்தமும் ஏற்படுகின்றன. நாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!

No comments :

Post a Comment