Tuesday, September 28, 2021

மற்றவர் மனசுல இடம் இருக்கா?

அக்கறையுடன் ஆதரவை நல்கி நமக்கு உதவி புரிந்தவர்கள் நம் நெஞ்சிருக்கும் வரை நம் நினைவில் இருப்பார்கள் -

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக் கூடாது. ரொம்ப மண்டையைப் போட்டு பிச்சுக்கக் கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. பரவாயில்ல, அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க….  தயாரா?.....

1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்..

2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…

3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க….

4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க…..

5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…

உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லேதானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ, அல்லது தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தவர்களோ பெரும்பாலும் நினைவில்  இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்களெல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல்ல. அந்தந்த துறையில் உச்சத்தை தொட்டவர்கள், மிகப் பெரிய சாதனை யாளர்கள்.

ஆனால்……?

கைதட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன. சாதனைகள் மறக்கப் பட்டுவிட்டன. விருதுகளும் பாராட்டுக்களும் அவர்களுடனேயே புதைந்து போய் விடுகின்றன. இப்பொழுது இன்னொரு ஐந்து கேள்விகள் கேட்கிறேன்- பதில் உடனே கி்டைக்குதா என்று பாருங்கள்-

1) உங்கள் பள்ளிக் காலத்தில் மிகச் சிறப்பாக பாடம் நடத்திய மூன்று ஆசிரியர்களின் பெயரை சொல்லுங்கள்.

2) உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவிய மூன்று நண்பர்களை சொல்லுங்கள்…

3) உங்களுக்கு வாழ்க்கையில் பயனுள்ளதை கற்றுக்கொடுத்த சிலர் பெயரை கூறுங்கள்…

4) உங்கள் வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், மிகுந்த சுவாரசியமாகவும் மாற்றிய சிலரை கூறுங்கள்….

5) நீங்கள் யாருடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்களோ அவர்கள் பெயர்களை சொல்லுங்கள்…

இந்த கேள்விகளுக்கு சில மணித் துளிகளில் விடைகளை பட்டென்று எழுதி குவித்திருப்பீர்களே? இதிலிருந்து என்ன தெரிகிறது? உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் பணக்காரர்களோ? புகழ் பெற்றவர்களோ? அல்லது பாராட்டுக்களை குவித்தவர்களோ? அல்ல. இவர்கள் உங்கள் மீது அக்கறை செலுத்தியவர்கள், செலுத்துபவர்கள் மட்டுமே. மற்றவர்களை மறக்கும் நீங்கள் இவர்களை மறப்பதில்லை, ஏன்?

பணம் பட்டம் பதவி இவற்றின் மூலம் பெறும் புகழோ, வெற்றியோ நிலையானதல்ல. ஆனால், பிறருக்கு உதவி செய்து, பிறர் மீது அக்கறை கொண்டு ஒருவர் பெறும் புகழே, பெருமையே, வெற்றியே நிலையானதாகும் -

உங்களுக்கு தெரிந்த சிலரிடம் இப்படி கேள்விகள் கேட்டு, அவர்களில் ஒருவராவது விடையில் உங்கள் பெயரையும் சொல்லுவார்கள் என்றால்… நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்றே அர்த்தம்.

எனவே,அடுத்தவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்க வேண்டுமென்றால், எப்போதும் நல்லதே நினையுங்கள். எல்லோருக்கும் நல்லதையே சொல்லுங்கள். நல்லதையே செய்யுங்கள். 

கோவிலுக்கு போய் விழுந்து விழுந்து கும்பிட்டு கடவுள் மனசுல இடம் பிடிக்கிறது இருக்கட்டும். முதலில் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் மனசுல நமக்கு இடம் இருக்கான்னு பார்ப்போம்.

 

No comments :

Post a Comment