Tuesday, October 15, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1291 TO 1305

1291. மோட்சம் அடைவது என்றால், இந்த வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து விடுதலை பெற்று, மீண்டும் பிறப்பில்லாமல் இறைவனுடைய திருவடியை அடைவது ஆகும்.

1292. நமது எண்ணங்களும், சிந்தனைகளும், சொல்லும், செயலும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு நல்லது செய்யுமெனில் இறைவனே நம்மைத் தேடி வருவார்.

1293. நாம் பிறரிடமோ, அரசாங்கத் திடமோ, குறை காணுவதற்கு முன்னால், நம்மிடம் உள்ள குறைகளை சரி செய்த பிறகு, அவர்கள் மீது குறை கூறுவது நல்லது.

1294. ஆண் என்றால் பணம் சம்பாதிப்பவராக இருக்க வேண்டும். பெண் என்றால் வீட்டு வேலையில் உதவி செய்பவராக இருக்கவேண்டும். இல்லையென்றால் வேஸ்ட்.

1295. இப்போது கருத்தொருமித்த தம்பதிகள் அபூர்வம். அனுசரித்துப் போகும் தம்பதிகள் அதிகம். சண்டையிட்டு விவாகரத்து கோரும் தம்பதிகள் மீதம்.

1296. பெண்கள் படித்து, வேலைக்குப் போய், சம்பாதிக்கும் போது, குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்க வேண்டும். உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

1297. திரிதோஷ சமப் பொருட்கள், ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் தான் சமையலுக்குத் தாளிக்கப் பயன்பட்டன.

1298. மழைக்காக மைதானத்தில் எல்லோரும் பிராத்தனை செய்ய வந்தனர். ஒரு சிறுவன் மட்டும் குடை கொண்டு வந்தான். அதுதான் இறைவன் மீது நம்பிக்கை.

1299. மேலே தூக்கிப் போடப்பட்டு, பிடிக்கப் படும் குழந்தைக்கும் தெரிகிறது, தான் கைவிடப் படப் போவதில்லை என்று! நம்மிடத்தில் அவ்வளவு நம்பிக்கை.

1300. தினமும் உறங்கப் போவதற்கு முன்பு கடிகாரத்தில் அலாரம் வைக்கிறோமே அதுதான் நாம் நாளை கண்டிப்பாக உயிருடன் இருப்போம் என்ற நம்பிக்கை.

1301. நாளை என்ன நடக்கும் என்று தெளிவாகத் தெரியாமலேயே நாம் திட்டம் தீட்டுகிறோமே அதுதான் நமது வாழ்வின் மீது உள்ள தன்னம்பிக்கை!

1302. எத்தனையோ பேர் கல்யாணம் ஆகி கஷ்டப்படுவதைப் பார்த்தும், நாமும் குடும்பஸ்தனாகி, குழந்தை குட்டிகளை பெற்று வளர்ப்பதே திட நம்பிக்கை!

1303. எனக்கு எண்பது வயது என்று கூறுவதற்கு பதிலாக, எனக்கு வயது இருபது, அனுபவம் அறுபது வருடங்கள் என்று கூறலாமே. அது தன் மீது உள்ள நம்பிக்கை.

1304. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை பற்றி யாராவது சிறிது விளக்கம் கூற முடியுமா?

1305. தன்னைப்போல பிறரை நினை. மற்றவர்கள் உங்களுக்கு எதை செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.






No comments :

Post a Comment