Saturday, May 11, 2024

ரமண மகரிஷி.

ரமணபகவானை பற்றி நான் படித்த மற்றுமொரு ருசிகரமான தகவல் இதோ:


திருவண்ணாமலையில் உள்ள விருபாக்ஷ குகையில் 1899 முதல் 1916 வரை ரமணமகரிஷி தங்கியிருந்தபோது அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சுவாரசியமான சம்பவம் இது.


ஒரு நாள் குகையில் அமர்ந்திருந்தபோது, சிருங்கேரி சங்கராச்சாரியாரின் சீடரான ஒரு துறவி ரமணரை பார்க்க வந்திருந்தார். ரமணமகரிஷி முறையாக சன்னியாசம் பெறவேண்டுமென்று அவரை சம்மதிக்க வைக்க முயன்றார்.


இளம்சுவாமியான ரமணர், வெள்ளை கௌபீனம் அணிவதை விடுத்து காவி உடை அணிய வேண்டுமென்று சாஸ்திரங்களை உதாரணம் காட்டி வாதாடவும் செய்தார்.


ரமணர், பிராமணர் என்பதால் சாஸ்திரங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதன்படியான நியமங்களைப் பின்பற்ற வேண்டுமென்றார் அந்தத் துறவி.


ரமணர் சம்மதித்தால், சன்னியாசத்தை ஏற்பதற்கான நடைமுறைகள் அனைத்தையும் தானே செய்து தருவதாகவும் வாக்களித்தார். அவர் சொன்ன அனைத்தையும் கேட்டு விட்டு, தனக்கு அதில் சம்மதம் இல்லையென்று ரமணர் மறுத்தார்.


சிருங்கேரியிலிருந்து வந்த துறவியோ மனம் தளரவில்லை. இளம் ரமணருக்கு அவர் கடைசியாக ஒரு நிபந்தனை விதித்தார். தான் ஊருக்குள் சென்று ஒரு மணி நேரத்தில் திரும்பி வருவேன் என்றும் அதற்குள் ரமணர் சன்னியாசத்துக்கு சம்மதம் தெரிவிக்கவேண்டுமென்றும் கூறிச் சென்றார்.


சிருங்கேரியைச் சேர்ந்த சாது ஊருக்குள் சென்றதும், ரமணர் மீண்டும் தனியாக இருந்தார். அப்போது அந்த இடத்துக்கு வந்த பட்டிக்காட்டான் ஒருவர், புத்தகங்கள் அடங்கிய மூட்டை ஒன்றை ரமணர் முன் வைத்துவிட்டு, ஒரு இடத்துக்குப் போய்விட்டு வருவதாகவும், புத்தக மூட்டையைப் பார்த்துக் கொள்ளுமாறும் சொல்லிவிட்டுப் போனார்.


பட்டிக்காட்டான், சிருங்கேரி சாது இருவருமே சொன்ன நேரத்துக்கு திரும்பவில்லை. இளம் ரமணர் மூட்டையிலிருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தார். அதில் கிடைத்த ஒரு புத்தகம் அருணாஜல மகாத்மியம். அந்தப்புத்தகத்தை எடுத்து பக்கங்களை புரட்டி ஒரு சுலோகத்தைப் படித்தார் சுவாமி.


தான் படித்த சுலோகத்தை ஒரு துண்டு காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டார். பின்னர், கண்களை மூடி நிஷ்டையில் ஆழ்ந்தார்.

ரமணர் கண்களைத் திறந்து பார்த்தபோது புத்தக மூட்டையை காணவில்லை. அந்த கிராமத்தான் எங்கே போனார் என்றும் தெரியவில்லை.


தன் வேலையை முடித்துக்கொண்டு சிருங்கேரி சாது, ரமணரிடம் திரும்பினார். தான் எழுதி வைத்த சுலோகத்தை ரமணர் அவரிடம் காண்பித்தார்.


“புனிதமான அருணாசல குன்றிலிருந்து மூன்று யோஜனை தூரத்துக்குள் (முப்பதுமைல்) வாழும் யாருக்கும் தீட்சை தேவையில்லை. இருப்பினும், அவர்கள் மோட்சத்தை அடைவார்கள்.” என்பதுதான் அந்த சுலோகத்தின் பொருள்.


சாது, சிருங்கேரிக்கு திரும்பி மடத்திலிருந்த சங்கராச்சாரியாரிடம் இந்த சம்பவத்தை சொன்னார். சங்கராச்சாரியார் அதைக் கேட்டுவிட்டு, ரமணமகரிஷி ஒரு ‘அத்யாச்ரமி' என்றார். அவர் எல்லா ஆஸ்ரமங்களையும் கடந்தவர் என்றும் அவருக்கு எந்த விதிகளும் பொருந்தாது என்றும் கூறினார்.


பகவான் ரமணமகரிஷி சன்யாசிக்களுக்குண்டான காவி வஸ்திரம் அணியாவிட்டாலும் அவரைப்போல உத்தம சன்யாசி கிடையாது. அது போல ஒரு பாரம்பரியம் மிக்க பெரியமடத்தின் அதிபதியாக (ஒரு ராஜாவிற்குரிய அந்தஸ்தும்,கௌரவமும்) இருந்தபோதிலும் பரமாச்சார்யார் எல்லாவற்றையும் விட்ட உண்மையான துறவியாய் விளங்கினார்.


சமகாலங்களில் வாழ்ந்த இவ்விரு மகோன்னத புருஷர்களை பெற்றது தமிழ்நாடு செய்த பெரும்பாக்யம் அல்லவா.


ரமணரிடம் புத்தக மூட்டையை கொடுத்த பட்டிக்காட்டான் யார்? ரமண மகரிஷியை திருவண்ணாமலைக்கு ஈர்த்த அந்த பரமேச்வரன் தான் என்பது என் அனுமானம்.


அருணா ஜலமே போற்றி. ஆராவமுதே போற்றி.




No comments :

Post a Comment